மனம் திருந்திய மன்னன் (குட்டிக் கதை)

துவாபர யுகத்தில் மயூரசன்மன் என்றொரு மன்னன் வைரபுரி என்ற நாட்டில் கொடுங்கோலாட்சி புரிந்துவந்தான். பல ஆண்டுகள் தன் பிரஜைகளைக் கொடுமைப்படுத்திவந்த மன்னன், திடீரென ஒரு நாள் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தினான். தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேட விரும்பி ஒரு முனிவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதபூஜை நடத்தி அன்னதானம் செய்தான்.

போஜனம் ஆனவுடன் முனிபுங்கவர், “ராஜனே! எனக்கு போஜனம் அளிப்பதால் மட்டும் நீ செய்த பாவங்கள் கரைந்துவிடாது. அதற்கு நீ பிரம்மதேவனைக் குறித்து நாற்பத்தியாறு லக்ஷம் ஆண்டுகள் தவம் புரிய வேண்டும்” என்று கூறினார்.

மன்னன் முனிவரையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்றுவிட்டு பிரம்மனை நோக்கித் தவமிருக்கலானான். இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல், வெயில் என எல்லா இயற்கைச் சீற்றங்களையும் பொறுத்துக்கொண்டு பிரம்ம தரிசனத்துக்காகத் தவம் கிடந்தான்.

இவ்வாறாகப் பதினாயிரம் ஆண்டுகள் கழிந்தன. திடீரென ஒரு நாள் அவன் முன்னே ஓர் ஒளிப் பிழம்பு தோன்றியது. அதிலிருந்து அழகிய தேவகன்னிகை ஒருத்தி வெளிப்பட்டுப் புன்னகைத்தாள். “நரனே! நான் பிரம்மதேவனின் காரியதரிசி. நீ செய்திருக்கும் எண்ணற்ற பாவங்களுக்கு அவர் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட மாட்டார். நீ முட்களின் மீது ஒற்றக் காலில் நின்று இன்னும் ஐம்பத்தியெட்டு லக்ஷம் ஆண்டுகள் தவம் செய்ய வேண்டும்” என்று கூறி மறைந்தாள்.

மயூரசன்மன் அவள் சொற்படி முட்களின் மீது ஒற்றைக் காலில் நின்று தவமிருந்தான். அறுபத்தியிரண்டு லக்ஷம் ஆண்டுகள் கழித்து மன்னனுக்கு நா வறண்டுபோய் சொல்லொணாத் தாகம் ஏற்பட்டுத் தவம் கலைந்தது. சிறிது நீர் அருந்திவிட்டுத் தவத்தைத் தொடரலாம் என்று எண்ணிய மன்னன், அந்தக் கானகத்தில் நீர் தேடி நெடுந்தூரம் அலைந்தான். அருவிகள், ஓடைகள் எல்லாம் வற்றியிருந்தன. சுனைகள் காய்ந்த இலைகளால் நிரம்பியிருந்தன. அவனிருந்த மரத்தைத் தவிர எல்லா மரங்களும் வெட்டப்பட்டிருந்தன. மனம் வெறுத்த மன்னன், காட்டிலிருந்து வெளியேறினான்.

மயூரசன்மன் நாட்டுக்குள் நுழைந்ததும் ஆட்டோக்களை, கார்களை, தொலைபேசி பூத்களை, திரையரங்குகளைக் கண்டான். யுகம் மாறிவிட்டது என்றும் தன் தவத்தை இனியும் தொடரவியலாது என்றும் உணர்ந்தான். கலியுகத் தொழில்கள் எவையும் தெரியாததால் மயூரசன்மன் தாகத்தைத் தணித்துக்கொண்ட பின் காசிக்குச் சென்று பிச்சை எடுக்கத் தொடங்கினான்.

எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள் (கதை)

ஐரோப்பிய அரசியலையும் அதன் மூலம் உலக அரசியலையும் உலக நாடுகளுக்கிடையிலான அரசியல், கலாச்சார, வர்த்தக உறவுகளையும் மட்டுமல்லாது கலை, இலக்கியத் துறைகளையும் பலவர்க்கத்து மக்களதும் வாழ்முறைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு பெருநிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாகும். பொதுவாக ஒரு வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்து சில நூற்றாண்டுகள் ஆன பின்னர் அது குறித்துப் பல விதக் கேள்விகளை வரலாற்றாய்வாளர்கள் எழுப்புவதுண்டு. உண்மையில் நடந்தது என்னவென்ற தேட்டையில் வரலாற்றறிஞர்கள் ஈடுபடத் தொடங்குவதுண்டு. அது போலவே பிரெஞ்சுப் புரட்சி குறித்தும் பல கருதுகோள்கள் உண்டு ஆகும். பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை எனவும் அது பர்மாவில் நிகழ்ந்தது எனவும் ஒரு சாராரும், பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை எனவும் அது பின்லாந்தில் நிகழ்ந்தது எனவும் இன்னொரு சாராரும், இவ்விருபெரும் புரட்சிகளுமே கட்டுக்கதைகள்தாம் என வேறொரு சாராரும் கூறிவருகின்றனர். எனது இப்பதிவானது இம்மாறுபடும் கருத்துகளால் விளைந்துள்ள குழப்பங்களைக் களைவதுடன் பிரெஞ்சுப் புரட்சி நடந்தது பிரான்சில்தான் என்பதான உண்மையை நிறுவ முயல்கின்றது.

பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த ஆண்டான 1789இன்போது நான் பிரான்சில், குறிப்பாக பாரீஸ் நகரில் இருந்தேன். அக்காலத்தில் சென்னையிலிருந்து வியன்னாவிற்கு நேரடிப் பேருந்து கிடையாது. கல்கத்தா சென்று அங்கிருந்து சுமார் 750 மணிநேரம் ரயிலில் பயணித்துப் பாரீஸில் இறங்கி வியன்னா செல்லும் பேருந்தைப் பிடிக்கவேண்டும். பாரீஸிலிருந்து வியன்னாவிற்குப் பயணம் 16 மணி நேரம்தான். நான் வியன்னாவிற்குச் சென்ற காரணம், ஜெர்மானிய மகாகவி கதேயின் நூற்றாண்டு விழாவில் கட்டுரை வாசிக்க என்னை அழைத்திருந்தனர். 02-12-1789 அன்று நான் பாரீஸில் கால் பதித்தபோது வசந்தகாலம். பாரீஸின் வசந்தகாலம் உலகப் பிரசித்தி பெற்றது. நூற்றாண்டு விழா நடைபெற இன்னும் இரு நாட்கள் இருந்ததால் அங்கு தங்கத் தீர்மானித்தேன்.

நான் இருந்த விடுதியான ‘பலெ த்ராத்வார் த பாரி’ (Palais Trottoir de Paris) மூந்நூறு வருடப் பழமைவாய்ந்ததாகும். பல பிரெஞ்சு அறிவுஜீவிகளின் சரணாலயமாகவும் விவாதத் தலமாகவும் அது இருந்தது. புரட்சி நடந்த அன்று அதைச் சிறிதும் எதிர்பார்த்திராத பலரில் நானும் ஒருவர். எனக்குப் பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தால் அந்நாட்டு நாளேடுகளைப் படித்து புரட்சியை எதிர்நோக்கியிருப்பேன். அது எனது முதல் பாரீஸ் விஜயமாதலால் நகரின் பழம்பெருமை வாய்ந்த நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் புறப்பட்டேன். ஆர்க் த திரியோம்ப், முலான் ரௌஜ் போன்ற இடங்களில் நல்ல காபி கிடைக்கும் என நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன்.

புரட்சி நடந்த அன்று காலை சுமார் 11 மணியளவில் ‘பிஸ்த்ரோ’ (Bistro) ஒன்றில் தேனீர் அருந்தியபடி தெருக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தேன் (’பிஸ்த்ரோக்கள்’ என்பவை திறந்தவெளி உணவு விடுதிகளாகும். இங்குச் சிற்றுண்டி மட்டுமே கிடைக்கும்; சாப்பாடு கிடையாது. இவ்விடுதிகளில் மக்கள் பிரெஞ்சு நாளேடுகளைப் புரட்டியபடி பானங்கள் அருந்துவதும் அன்றாடக் காட்சி). அப்போது திடீரென ஒரு பேரோசை எழுந்தது. சுமார் இருபது பிரெஞ்சுக்காரர்கள் திபுதிபுவென ஓடிவந்தனர். ஒரு சிலர் விடுதியில் நுழைந்து ‘லா ரெவல்யூசியோன்! லா ரெவல்யூசியோன்!!’ எனக் கத்தினர். எனக்கு அம்மொழி தெரியாது எனினும் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குக் கடத்தப்பட்ட 20,000 சொற்களில் ஒரு நூறாவது எனக்குத் தெரிந்திருந்தன. அதில் புரட்சி எனும் பொருள் கொண்ட ‘ரெவல்யூஷன்’ என்பதும் ஒன்று. ரெவல்யூசியோன் என்பதன் பொருளை அதன் மூலமாகப் புரிந்துகொண்டேன். உலகைச் சுனாமியாய்ப் புரட்டிப் போட்ட பிரெஞ்சுப் புரட்சி வந்துவிட்டதென்பதும் அது தற்போது அந்த பிஸ்த்ரோ இருந்த தெருவின்வழியே வருகிறது என்பதும் எனக்குப் புரிந்தது.

எனது வாழ்நாள்க் காலத்தில் ஒரு தெருச் சண்டையைக் கூடப் பார்த்தறியாதவன் நான். ஆகவே புரட்சிக்கு எவ்வாறு உடனடி எதிர்வினையாற்றுவது என்றறியாமல் நான் குழம்பி நிற்கையில், சுமார் ஆயிரம் பிரெஞ்சுப் பொதுமக்கள் ‘வீவ் லா பிரான்ஸ்! வீவ் லா பிரான்ஸ்!! (பிரான்ஸ் வாழ்க!) எனக் கோஷமிட்டபடி அத்தெருவில் விரைந்துவந்தனர். கிட்டத்தட்ட ஒவ்வொருவரதும் கைகளில் கொடிகளிருந்தன. சிறிது தொலைவிலிருந்து துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் எழும்பின. நான் பிரெஞ்சுப் புரட்சியை உயரத்திலிருந்து பார்க்கலாமென மாடிக்கு ஓடினேன். அங்கு சுமார் இருநூறு பேர் பழைய புத்தகங்களையும் நாளேடுகளையும் பத்திரிகைகளையும் துண்டுதுண்டாகக் கிழித்துக்கொண்டிருந்தனர். அது ஜனத் திரளின் மீது தூவுவதற்காக எனப் பின்னரே எனக்குத் தெரியவந்தது. மாடியில் இடமின்றி நான் உடனடியாக முதல் தளத்திற்குச் சென்றேன்.

முதல் தளத்தில் கம்பளி நூல் கொண்டு உடை பின்னிக்கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் புரட்சி வெடித்ததற்கான காரணியை எனக்கு எடுத்துரைத்தார். மன்னர் பதினாறாம் லூயியின் மோசமான ஆட்சியினால் நாட்டில் வறுமையும் சீர்திருத்தமின்மையும் பலவாறான சமூகச் சீர்கேடுகளும் தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தன. பிரபுக்களும் பிறவகைப்பட்ட செல்வந்தர்களும் செழிப்பில் திளைத்துக்கொண்டிருந்தனர். வால்டேர், ரூஸோ, திதரோ போன்ற சிந்தனையாளர்களும் மக்கள்நலப் பணியாளர்களும் மேற்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் திட்டமிடப்படாத சிறைநிரப்புப் போராட்டங்களாயின. ‘ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்’ என்ற ராணியாரிணி மேரி அந்த்வானெத்தினது பேச்சு, மக்களது குமுறலுக்கு எரிபொருளூட்டவே செய்திருந்தது.

ஆயுதமேந்திக் கோஷமிட்டவாறு தெருக்களில் பெருந்திரளாய்ச் சுற்றியலைந்து புரட்சிக்குக் கூட்டம் சேர்த்தபடி அரண்மனை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தவர்களுடைய - புரட்சியாளர்களுடைய - வாழ்க்கையினது அவலங்களையும் போராட்ட வழிமுறைகளையும் அந்த அம்மாள் எனக்கு விளக்கினார். ஒன்றிற்கு மேற்பட்டோரின்றிப் புரட்சி என்றைக்கும் சாத்தியமானதில்லை என்று ஜெர்மானிய எழுத்தாளர் எலியாஸ் கானட்டி எழுதியிருப்பது எனது நினைவில் தோன்றி மறைந்தது.

நானிருந்த தெருவைக் கடந்திருந்த ஐம்பதினாயிரம் பேரே தொடர்ந்து வந்துகொண்டிருப்பதான உணர்வு எனக்கேற்படும் வகையில் மக்கள் வெள்ளம் புழங்கியபடி இருந்தது. மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை முழுவதிலும் புரட்சியாளர்களும் அவர்களது மனைவியரும் குழந்தைகளும் நிரம்பியிருந்தனர். மன்னரும் அரசியும் சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டனர் எனவும் அவர்களைக் கொல்லுவதற்காகவென்றே அவசரமாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘கில்லட்டின்’ கருவி அதற்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் மூட்டை முடிச்சுக்களுடன் காணப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் சொன்னார். அரண்மனையிலிருந்து திரும்பிவந்தபடி இருந்த ஒரு புரட்சியாளர் கூட்டமானது கழுத்தில் நகைகள் மற்றும் கைகளில் பெரிய விலையுயர்ந்த ஜாடிகளுடன் காட்சியளித்தது. மாலைச் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் புரட்சி எப்போது முடியும் என ஆங்கிலத்தில் வினவினேன். குறைந்தபட்சம் அதிகாலை மூன்று மணி ஆகலாம் என்று அவர் பிரெஞ்சு மொழியில் அளித்த பதிலின் பொருள் எனக்குச் சென்னை வந்த பிறகே தெரிந்தது.

புரட்சி என்று வந்துவிட்டால் புரட்சிக்காரர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று வர்ணிக்கும் நுட்பமான பாடல் ஒன்று ஸ்வப்னவாசவதத்தையில் உண்டு. ஸ்ரீரங்கம் கீதாசாரியார் உரையைக் கேளுங்கள் -

வத்திக் குச்சி பத்திக்காதுடா - யாரும் வந்து ஒரசுற வரையிலே
வம்பு தும்பு வச்சுக்காதுடா - யாரும் வந்து மெரட்டுற வரையிலே
(வத்திக்குச்சி)

வத்திக்குச்சி (தீக்குச்சி) தானாகப் பற்றிக்கொள்ளாது. அதை யாராவது வந்து ஒரச வேண்டும். வருவது மிக முக்கியம். ஒரசுதல் என்றால் உரசுதல். வத்திக்குச்சி வம்பு தும்பு (வம்பு தும்பு) வைத்துக்கொள்ளாது. அதாவது யாராவது வந்து ‘மெரட்டுற’ (மிரட்டும்) வரையில். ஒரு புரட்சியாளனின் மனமும் ஒரு தீக்குச்சியைப் போலத்தான்.

பிரெஞ்சுப் புரட்சி பற்றி வால்டேர் சொல்வதைக் கேளுங்கள்:

“புரட்சிக்கான தேவை பற்றி எழுத்தாளன், தத்துவ ஞானி என்ற முறையில் நிறைய பேசியாயிற்று. இனி நீங்கள் ஆச்சு, ராணி மேரி ஆச்சு என்று விட்டுவிட்டேன். இனி ரொம்ப காலத்துக்கு எந்தப் பத்திரிகைக்கும் பத்தி எழுதப்போவதில்லை என்று தீர்மானித்து நிறுத்திவிட்டேன். பிரெஞ்சுக்காரர்களுக்கு என் பத்தியை எதிலும் படிக்கவில்லை என்றால் உருளைக் கிழங்கு செரிக்காது.”

வால்டேரின் சமகாலச் சிந்தனையாளரான ரூஸோவின் கருத்தும் கிட்டத்தட்ட வால்டேரின் கருத்துடன் ஒத்துப் போகிறது:

“I am liking the French revaloosan. It is good for all public people. All public people needing money. Queen is telling why not eat bun butter jam? That lady is fooling, you understand? Public is very angry. Yes, really very very angry. If public is angry, you French kingdom people better pack up. You are no use.”

இத்தனைக் களேபரத்திலிருந்து தப்பித்து வந்து மாம்பலம் பாசஞ்சர் ரயிலைப் பிடிக்கும்போது காலை 5 மணி ஆகியிருந்தது. டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்து ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன். உலகின் இன்னொரு மூலையில் புரட்சி நடப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. ஒரு இளைஞன் ஆவலுடன் என்னிடம் வந்து “சுக்குக் காபி வேண்டுமா சார்” என்றான். ஒன்று வாங்கிக் குடித்தேன். வால்டேரும் ரூஸோவும் தெரியாத அவனுக்கு நிச்சயம் அன்று உருளைக் கிழங்கு செரித்திருக்கும்.

16 அத்தியாயங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் எனது நெடுங்கதை இன்று வலையேறுகிறது. இன்னும் எழுதி முடிக்கவில்லை. இது வரை 16 அத்தியாயங்கள். முதல் அத்தியாயத்தை முன்பே பதிவாகப் போட்டிருக்கிறேன். கடைசியாக எழுதப்பட்ட சில அத்தியாயங்கள் பின்னர் நீக்கப்படலாம். கதையின் தலைப்பு ‘திசை காட்டிப் பறவை‘. முன்னுரை பிற்பாடு சேர்க்கப்படும்.

வாழ்க்கையின் அர்த்தம்… (கதை)

நான் எழுதிப் பிரசுரமான முதல் கதை.

வாழ்க்கையின் அர்த்தம் சார்ந்த ஒரு புரிதலை நோக்கி…

‘டிக் டிக் டிக்’ என்று ஓடாத கடிகாரங்கள் சப்திக்காத இரவு. மழை கொட்டுகிறது. வானத்திலிருந்து பூமியின் மீது மழை கொட்டுகிறது - பூமியிலிருந்து வானத்தின் மீது பெய்தால் மழை நீர் தேங்க வானத்தில் மண் இல்லை என்று. மழை எதன் மீது பெய்தால் என்ன? எருமை மாட்டின் மீது பெய்வது போலத்தானே? நனைந்துவிடுவோம் என்று பூமி அஞ்சி நகர்ந்து பக்கத்து கிரகத்தின் மீது இடித்துக்கொள்ளவா போகிறது? அல்லது வானம்தான் தன் மீது மழை பெய்யும் பட்சத்தில் நகர்ந்துகொள்ளுமா?

இன்னொரு விஷயம், பூமியால் நகர முடியாது; உருண்டு போகத்தான் முடியும். அதுவும் யாராவது உருட்டி விட்டால்தான் முடியும். பூமியிலிருந்து வானத்தின் மீது மழை பெய்தால் அது ஒரு சாதனைதான். ஆனால் அது தானாக நடப்பது (நடந்தால்). அதற்காக யாரையும் வாழ்த்திப் பாராட்டு விழா நடத்த முடியாது. ஆனால் பூமியை உருட்டுவது உங்கள் தலையை நீங்களே கடித்துச் சாப்பிடும் அளவுக்கு சுலபம். அவ்வாறு உருட்டும்போது கடல், ஆறு, ஏரி, குட்டைகள், வாழைப்பழத் தோல்கள் இல்லாத இடமாகப் பார்த்து கையை வைத்து உருட்டினால்தான் வழுக்காது. கை வைக்கும் இடத்தில் முட்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஜாதிக் கலவரம், மதக் கலவரம் எதுவும் சமீபத்தில் நடந்திராத இடமாகக் கை வைக்கவேண்டும். இல்லையென்றால் சோடா பாட்டில் துண்டுகள் கையைக் குத்திக் கிழித்துவிடும். கை வைக்கும் இடத்தில் அணையாத சிகரெட் துண்டுகள், மின்சாரக் கம்பிகள் இருக்கக் கூடாது. ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் பூமியை உருட்ட முயற்சிக்கும்போது பெரிய விண்கல் ஏதாவது உங்கள் முதுகைக் குறி வைத்து சீறிப் பாய்ந்து வந்தால் பயந்து நகர்ந்துகொள்ளாதீர்கள். நீங்கள் நகர்ந்தால் அது பூமியின் மீது விழுந்து பெருத்த உயிர்ச் சேதம், பொருட்சேதம் விளையும். விண்கல் பட்டு நீங்கள் செத்தால் பரவாயில்லை. விண்கல் பட்டு சாகும் பெருமை எத்தனை பேருக்குக் கிடைக்கிறது? அதுவும் பூமிக்காக உயிர்த் தியாகம் செய்யும் பாக்கியம்தான் எத்தனை பேருக்கு வாய்க்கிறது? அப்படி ஒன்று நடக்கவிருந்து நீங்கள் உயிர்த் தியாகம் செய்துவிட்டால் உங்களுக்கு அந்தரத்தில் சிலை எழுப்ப நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் இத்தனையும் பூமி மழைக்கு பயந்தால்தானே?

பூமி உருவாகி பில்லியன் வருடங்களில் பூமி மழைக்கு பயந்து நகர்ந்ததாக வரலாறு உண்டா? நியூட்டன் வந்தார், எயின்ஸ்டீன் வந்தார், ஹாக்கிங் வந்தார். எவனுமே பூமி நகர்ந்ததாகச் சொல்லவில்லையே? அதனால் பூமி நகராது என்றே நம்புவோம். பூமி நகருமென்று நிரூபிக்கிறேன் பேர்வழி என்று எவனாவது வந்தால் அவனைக் கொன்று புதைத்துவிட்டுத் தலைகுளிப்போம். பூமி இது வரை நகராததால் இனிமேலும் நகராது என்று நம்பிக்கை வைப்போம். நம்பிக்கையில்தானே உலகமே இயங்குகிறது? ஆபீசுக்குப் போகும்போதே பஸ் சக்கரத்துக்கு அடியில் தலை மாட்டிக்கொண்டு நசுங்கி மண்டையைப் போட மாட்டோம் என்ற நம்பிக்கையில்தானே தக்காளி சாதம் டிஃபன் கட்டிக்கொண்டு போகிறீர்கள்? உங்கள் கர்ப்ப மனைவியின் வயிற்றில் ஒரு பழைய காலத்து மர அலமாரி பிறக்காது என்ற நம்பிக்கையில்தானே சீமந்தம் கொண்டாடுகிறீர்கள்? அப்படி எல்லாம் நடக்காது என்றா சொல்கிறீர்கள்? இது வரை அப்படி நடந்ததில்லை என்றால் இனிமேல் அப்படி நடக்கவே நடக்காது என்று அர்த்தமா? பிறந்து சில மாதங்கள் வரை நடக்காமலிருந்து, பிறகு நீங்கள் நடை பழகியதில்லையா?

வயதான காலத்தில் நடமாட முடியாமல் நன்றாக அவதிப்படப் போகிறீர்கள். உங்கள் மகன், மருமகள் ஆபீசுக்குப் போய்விடுவார்கள். மகள் கல்யாணமாகிப் போய்விடுவாள். பேரக் குழந்தைகள் ஸ்கூல் விட்டதும் கிரிக்கெட் ஆடப் போய்விடுவார்கள். மனைவியை இழந்து நீங்கள் தனிமையில் வாடி இரவு வராதா, கட்டையை சாய்க்க மாட்டோமா என்று ஏங்குவீர்கள். பொழுது போக்க பேப்பர் படிக்கலாமென்றால் கூட உங்களுக்குக் கண் சரிவரத் தெரியாது. தெரிந்தாலும் பேப்பரில் வெட்டு, குத்து, கொலை, தந்தையே மகளைக் கற்பழித்த செய்திகள்தான் படிப்பீர்கள்.

ஒரு நாள் விடிகாலையில் பால் வாங்கப் போகும்போது மரணத்தைப் பற்றி யோசிப்பீர்கள். பார்த்துக்கொண்டே இருங்கள், உங்கள் வாழ்க்கையின் கடைசி காலத்தில் உங்கள் சாவுதான் ஹீரோ. நீங்கள்தான் ஹீரோயின். ஹீரோவை வெறுக்கும், கண்டு நடுங்கும் ஹீரோயின். ஆனால் உங்கள் ரெண்டு பேருக்கும் கடைசியில் கல்யாணம் நிச்சயம் உண்டு. முகூர்த்தத் தேதி தெரியாததால் அழைப்பிதழ் அச்சடிக்க முடியாது, அவ்வளவுதான். உங்களுக்குக் கொள்ளி வைத்த பிறகு மகன்கள் ஆகப் போகிற செலவைப் பற்றிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிப்பார்கள். ஏழாவது நாள் சமையல் சரியில்லை என்று சமையல்காரன் காதில் விழாதபடி மனைவியிடம் முணுமுணுப்பார்கள்.

ஆனால் இதெல்லாம் பூமி நகராது போனால்தான். தவறு, பூமி நகராது. உருளத்தான் செய்யும். அதுவும் யாராவது உருட்டிவிட்டால்தான். பூமியை உருட்டும் அளவு தெம்பு யாருக்கும் இங்கே இல்லை. வேறு எங்கேயும் கூட இல்லை. உண்மை என்னவென்றால், பூமியை உருட்டிக்கொண்டு போக முடியாது. மழை பூமியிலிருந்து வானத்தின் மீது பெய்யாது. அதனால்தானோ என்னவோ, நீர்க்குமிழிக்குள் சிறைபட்ட புகையின் உலகம் கடித்துப் போட்ட வடைகளால் ஆனது. ஜாக்கிரதை - இங்கே எலித் தொல்லை அதிகம்.

Next Page »