நமது சிந்தனைக்கு

Question: What do you get when you cross a postmodernist with a mafia boss?
Answer: An offer you can’t understand.

கலைத் தூக்கம்

சீனக் கலைஞர் ஒருவர் நியூயார்க்கில் வைக்கப்போகும் ஒரு இன்ஸ்டலேஷனுக்குப் பெண்கள் தேவைப்படுகிறார்கள். தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு படுக்கையில் படுத்துக்கொண்டால் போதும். தூங்கும்போது அவர்கள் கலைப் படைப்பாக இருப்பார்கள். விவரங்கள்: idealist.org. நன்றி: Art News Blog.

டெக்னாலஜி!

Wired பத்திரிகையின் ஐஃபோன் மதிப்புரையில் கிடைத்த முத்து இந்த Doonesbury கார்ட்டூன். இயந்திர மொழிபெயர்ப்பு ஞாபகம் வருகிறது.

pda.gif

பொறுப்பில்லாத எழுத்து

ஒரு விமர்சகர் மற்றவர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத விஷயங்களைப் பற்றி எழுதும்போது எவ்வளவு பொறுப்பாக எழுத வேண்டும். ஒரு மூத்த கலை விமர்சகரே தன் எழுத்தில் தகவல் பிழைகளை அடுக்கியிருக்கிறார்.

கலை பற்றி ‘வான்கா’ உட்படப் பல புத்தகங்களை எழுதியிருக்கும் தேனுகாவின் சமீபத்திய புத்தகம் பியத் மோந்திரியான் என்ற ஓவியரைப் பற்றியது. புத்தகத்தின் தலைப்பும் அதுவே (வெளியீடு சந்தியா பதிப்பகம், விலை ரூ. 100).

பிழைகளில்தான் தொடங்குகிறது இந்தப் புத்தகம். தாதா என்ற சமூக, கலை, பண்பாட்டு இயக்கத்தைப் பற்றி தேனுகா எழுதுகிறார்…

பிரான்சில் தோன்றிய டாடாயிஸ்டுகள் (Dadaists) இவ்வாறு கலையை அழிப்பதற்கென்றே உருவெடுத்திருப்பதாகத் தங்களைப் பிரகடனம் செய்து கொண்டனர். ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்திய இவர்கள், ஒவ்வொரு ஓவியத்தின் மீதும் சுத்தியல் கொண்டு உடைத்து நொறுக்கும்படி பார்வையாளர்களை வேண்டினர். ஒரு தினசரியிலிருந்து சில வரிகளைப் படித்துக்காட்டி நாங்கள் இப்போது கவிதைப் படித்ததாகக் கூறினர். ஓவியக் கண்காட்சியைக் காணவந்தோரை பொதுக் கழிவறை ஒன்றின் வழியாக வரவேற்றனர் இவர்கள். இவ்வாறெல்லாம் கலையை மிக மூர்க்கமாக அழிக்கத் திட்டமிட்ட டாடாயிஸ்டுகள் கலா பூர்வமாகச் சாதனைகள் எதனையும் செய்யவில்லை. டாடாயிஸம் அதன் உதய காலங்களிலேயே சிசு மரணமிட்டது.

கதையெல்லாம் சொல்லி தேனுகா அழிவு கொள்ளை தீமை கழகம் ரேஞ்சுக்கு உயர்த்தியிருக்கும் ‘டாடாயிஸ்டு’களின் இயக்கம்
அவர் சொல்வது போல் கலையை அழிப்பதற்காக உருவான பயங்கரவாத கேங் அல்ல.

முதலாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமைக்கப்பட்ட தாதா என்ற இந்த இயக்கம் போர் எதிர்ப்பு, கலையிலும் இலக்கியத்திலும் இருந்து வந்த மரபுகளை உடைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சமூக அமைப்பில் முழுவதும் நம்பிக்கை இழந்துவிட்டிருந்த இளம் படைப்பாளிகளின் அமைப்பு அது. அவர்களில் சிலருக்கு – உதாரணமாக ஓவியர் ஜார்ஜ் கிராஸ் – இடதுசாரி சார்பு இருந்தது.

தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் பயன்படுத்திய உத்திகளில் முக்கியமான ஒன்று, மக்களைப் பதற வைப்பது. அந்தக் காலத்து மனிதர்களுக்கு அவர்களுடைய ஸ்டைல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கலையை அழிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பிய தீவிரவாத கும்பல் ஒன்று குழந்தைத்தனமாக ஒரு டைப்ரைட்டருக்கும் தையல் மெஷினுக்கும் பந்தயம் நடத்தினால் எப்படி இருக்கும்? (இது நடந்தது!)
இன்னொன்று, தாதா இயக்கம் உருவானது பிரான்சில் அல்ல, ஸ்விட்சர்லாந்தில்.

“டாடாயிஸ்டுகள் கலா பூர்வமாகச் சாதனைகள் எதனையும் செய்யவில்லை” என்று ஒரு மூத்த கலை விமர்சகர் கிறுக்கியிருப்பதுதான் வயிற்றெரிச்சல்.

மார்செல் த்யுஷாம், ஜார்ஜ் கிராஸ், மேக்ஸ் எர்ன்ஸ்ட், மேன் ரே, ஹான்ஸ் ஆர்ப் என்று போன நூற்றாண்டில் கலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்கள் ‘தாதாயிஸ்டுகள்’தான். தாதாவின் வாரிசாக வந்த சர்ரியலிச இயக்கம், ‘தானாக எழுதும்’ உத்தி (automatic writing) போன்ற ஐடியாக்களை தாதாவிடமிருந்துதான் எடுத்துக்கொண்டது. தாதா அல்பாயுசில் போனது மட்டும்தான் அவர் சொல்வதில் நிஜம்.

தேனுகா விக்கிபீடியாவைக் கொஞ்சம் பழக்கப்படுத்திக்கொண்டால் நன்றாயிருக்கும். அதே போல ‘மரணமிட்டது’ என்றெல்லாம் பாசாங்கான, அபத்தமான தமிழில் எழுதுவதை நிறுத்தினால் புண்ணியமாய்ப் போகும்.

பின்னிணைப்பு: எனது ‘பிறழ்வு‘ பதிவில் இரண்டு தாதா கலைஞர்களின் படைப்புகள்: ரெடிமேட் கலை, பேராசையின் முகங்கள்.

பி.கு.: புத்தகத்தை நான் மேற்கொண்டு படிக்கவில்லை.

கலைக்கும் கண்காட்சி தேவை

பிரிட்டிஷ் வலையகமான கார்டியனில் படித்த கட்டுரையில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பார்த்துப் பெருமூச்சு விட்டேன். ரெனுவார் (Pierre Auguste Renoir) என்ற மாபெரும் பிரெஞ்சு ஓவியரைப் பற்றிய கட்டுரை அது.

தகவல்: பிரான்சில் அரசின் ஏற்பாட்டில் Salon என்ற வருடாந்தர கலைக் கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்தக் கண்காட்சி சுமார் ஒன்றரை நூற்றாண்டு பெரிய அளவில் நடந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சில வாரங்கள் நடக்கும் சலோன் கண்காட்சியில் அரசு அங்கீகாரம் பெற்ற கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைப்பார்கள். (‘மேலதிக’ விவரம்)

அதில் ஆயிரம் அரசியல் இருந்தது. ஆனால் நம்மூரில் புத்தகக் கண்காட்சி நடத்துவது போலவே இப்படியொரு கலைக் கண்காட்சியையும் நடத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இங்கே கலைத் துறை பணக்காரர்கள் அனுபவிக்கும் ஒரு சொகுசு சமாச்சாரம். படைப்புகளின் விலை நம் வாங்கும் திறனை மீறியதாக இருக்கிறது. தங்களை பாதித்த கலைஞர்களின் படைப்புகளுக்கும் அந்த பாதிப்பில் உருவான தங்கள் சொந்தப் படைப்புகளுக்கும் வருடக்கணக்கில் ஜெராக்ஸ் காப்பிகளை வரைந்து தள்ளி கேலரியில் வைத்துப் பணமும் புகழும் பெறும் கலைஞர்கள் இருக்கிறார்கள்.

நம்மூரில் வருடாந்தரக் கலைக் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டால் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பெயின்ட் வாங்கக் கூடக் காசில்லாத ஓவியர்கள் பிழைப்பார்கள். புத்தகம் வாங்க வரும் கூட்டம் நிச்சயம் கலைக் கண்காட்சிக்கும் அலைமோதும்.

புத்தகங்களுக்கு இல்லாத ஒரு சாதகமான அம்சம் கலைப் படைப்புகளுக்கு இருக்கிறது. வாங்கி வீட்டுச் சுவரில் மாட்டி அழகு பார்க்கலாம். ரொம்பச் சின்ன வீடாக இருந்தாலும் சிநேகா/ஐஸ்வர்யா ராய் காலண்டரை உள் அறையில் மாட்டிவிட்டு அந்த இடத்தில் நாம் கண்காட்சியில் மலிவு விலையில் வாங்கிய ஓவியத்தை மாட்டி வைக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

« Previous Page