கர்ட் வானகட் மரணம்

அமெரிக்க எழுத்தாளர் கர்ட் வானகட் (Kurt Vonnegut) இறந்துவிட்டார். அவருக்கு வயது 84.
Cat’s Cradle, The Sirens of Titan, Slaughterhouse-Five, Breakfast of the Champions உள்படப் பல நாவல்கள், Hocus Pocus, Welcome to the Monkey House உள்பட சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன.
மரபுகளைக் கடாசிவிட்டு எழுதும் பெரிய எழுத்தாளர்கள் பலர். ஆனால் கர்ட் வானகட் போல வேறு யாரும் எழுத முடியும் என்று தோன்றவில்லை. அறிவியல் புனைவு வடிவத்தில் – அதுவும் அந்த வடிவத்தைக் கிண்டல் செய்து – கனமான நகைச்சுவையுடன் எழுதினார் வானகட். இது அவரே உருவாக்கிய புதிய இலக்கிய வடிவம்.
அறிவியல் புனைவுகள் எதிர்காலத்தைப் பற்றி எச்சரித்தாலும் அவை பொதுவாக மனித இனத்தின் சாதனைகளைக் கொண்டாடுவதால், தனது ஆழமான அவநம்பிக்கையை வெளிப்படுத்தவே அவர் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தாரோ என்று தோன்றுகிறது.
‘பிரெக்ஃபாஸ்ட் ஆஃப் த சாம்பியன்ஸ்’ நாவலில் பக்கத்திற்குப் பக்கம் அவரே தடித்த கோட்டோவியங்கள் வரைந்திருப்பார் (கார்ட்டூன்கள் என்றும் சொல்லலாம்). இந்த நாவலில் ஒரு அத்தியாயத்தைப் படித்துப் பார்த்தால் அவரது நகைச்சுவையும் மிகக் காட்டமான விமர்சன பாணியும் தெரியும். முதல் அத்தியாயம் இங்கே. வானகட்டைப் படிக்காதவர்களுக்கு ரெகமண்டட்.
அஞ்சலிகள்: New York Times, Los Angeles Times
கவிதை உத்தி நெ. 1
பிதற்றலான உரைநடையைக் கவிதையாக்க நம் கவிஞர்கள் கையாளும் ஒரு உத்தியைப் பற்றிப் பயனுள்ள தகவல் ஒன்று இன்று வந்த டெக்கான் க்ரானிக்கிளின் இலவச இணைப்பில் கிடைத்தது.
வாக்கிய/வாசக அமைப்பை உல்டா ஆக்கும் உத்தியைத்தான் சொல்கிறேன். என்னையே மேற்கோள் காட்டிக்கொண்டால் -
எதையும் முதலிலேயே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது. அதனால்தான் சில கவிஞர்கள் கவிதையின் முதல் சொல்லையோ சொற்றொடரையோ அடுத்த சில வரிகளுக்கு ஒளித்து வைத்துக்கொண்டு கடைசி வரியாக ரிலீஸ் பண்ணுகிறார்கள்.
இதற்கு anastrophe என்று பெயராம் (தமிழ் இலக்கணத்திலும் இதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும்). விளக்கம்:
Inversion of the normal syntactic order of words. For example: “To market went she.”
அப்படியாயின் நம் கவிஞர்களில் பலர் poets அல்லர், anastrophists.
குறிப்புகள்:
» அனாஸ்ட்ரஃபிக்கு சில உதாரணங்கள் என் மூன்று காதல் கவிதைகளில்.
» கவிதையில் வாக்கிய அமைப்பை மாற்றுவது தவறு என்று நான் சொல்லவில்லை. அதுதான் கவிதை நடை என்றும் கவித்துவம் என்றும் நம்பிக்கொண்டு அதை மட்டுமே வைத்துக் கவிதை எழுதுவதே தமிழ் அனாஸ்ட்ராஃபி.
ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பு
இன்று வெளிநாட்டு இலக்கியப் படைப்புகளில் பலதும் ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கின்றன. காப்ரியல் கார்சியா மார்க்கஸ், இட்டாலோ கால்வினோ, ஆல்பேர் காம்யு, எல்லோரையும் வாழவைக்கும் காஃப்கா என்று பலர் தமிழாக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் புண்ணியத்தில்.
இதன் பக்கவிளைவு: மார்க்கஸையோ காஃப்காவையோ தமிழில் படித்தால் ஆங்கிலச் சொற்கள், வழக்குகள், சொற்றொடர்கள் என்று ஆங்கில watermark தெரிகிறது. என்னைப் போன்ற சிலருக்கு (அல்லது பலருக்கு) தமிழ் மொழிபெயர்ப்பில் பிற மொழிப் படைப்புகளைப் படிப்பதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இந்த அவநம்பிக்கைக்குக் காரணம், வெளிநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் நேரடியாக மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறார்கள். நம்மவர்கள் சம்பந்தப்பட்ட மொழி தெரியாமல் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத் தங்களுக்குப் புரிந்த வரை மொழிபெயர்த்து வைக்கிறார்கள்.*
இந்த second hand மொழிபெயர்ப்பில் என்ன ஆபத்தென்றால், ஒன்று: நம்மாட்கள் மூல மொழியிலிருந்து பெயர்க்காமல் வேறொன்றிலிருந்து பெயர்த்தெடுக்கிறார்கள், இரண்டு: அவர்களுக்குப் போதுமான ஆங்கில அறிவு இல்லை.
உதாரணமாக, தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை ஆங்கிலத்திற்குப் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. வார்த்தைகள் மாறி, சமயத்தில் பொருளும் தொனியும் மாறுகின்றன. அங்கீகாரம், விமர்சனங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை வைத்துத்தான் எந்த மொழிபெயர்ப்பு துல்லியமானது, தரமானது என்று தெரிந்துகொள்ள முடிகிறது.
நேரடியாக மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு வரும் படைப்புகளுக்கே இந்த கதி என்றால் சிறுபத்திரிகைகளையும் மற்ற சுமாரான மொழிபெயர்ப்புகளையும் மட்டுமே படித்துவிட்டு ஐரோப்பியப் பெயர்களை எடுத்து வீசும் நம்மவர்கள் அவற்றை மூலத்திலிருந்து அல்லாமல் ஆங்கிலத்திலிருந்தே மொழிபெயர்க்கிறார்கள். ஏமாறுபவர்கள் வாசகர்கள்தான்.
சமீப காலத்தில் எந்தச் சிறுபத்திரிகையில் வந்த எந்த மொழிபெயர்ப்பை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஆங்கிலம்தான் தலைவிரித்தாடுகிறது. பத்திரிகையின் ஆசிரியர் குழு என்னத்தைப் பிடுங்கிக்கொண்டிருக்கிறது என்ற கேள்வியே நம் முன் எழுகிறது. பலர் அடிப்படை ஆங்கில இலக்கணமும் மிக சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில வழக்குகளும் சொற்றொடர்களும் கூடத் தெரியாமல் வாடுகிறார்கள் (தாங்கள் வாடுவது அவர்களுக்குத் தெரியவில்லை).
மொழிபெயர்க்கும் அளவிற்குப் போதுமான ஆங்கிலம் தெரியாவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது என்று தீர்மானித்த பின் அந்த அறிவை வளர்த்துக்கொள்வது மொழிபெயர்ப்பாளருக்குள்ள பொறுப்பு. நமக்குத் தெரிந்தது தாராளமாகப் போதும், அதான் எல்லாம் டிக்ஷ்னரியில் இருக்கிறதே என்ற இவர்களது பொறுப்பில்லாத்தனத்தால் நஷ்டப்படுவது இலக்கியமும் மொழியும்தான்.
மிகக் கடுமையான, மிக அன்னியமான தமிழ் நடையில் இருக்கும் நாராசத்தை, உலக இலக்கியத்தைப் படித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் வாசகர்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற நிஜமான ஆர்வம் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ன செய்வார்? தான் மொழிபெயர்க்க விரும்பும் படைப்பு எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழி தனக்குத் தெரியவில்லை என்றால் அதைக் கற்றுக்கொள்வான் – அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி, ருஷ்ய மொழியாக இருந்தாலும் சரி.
நானும் லத்தீன் அமெரிக்க இலக்கியமெல்லாம் படிக்கிறவன்தான், நானும் இலக்கியத்தில் கொம்பன்தான் என்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்தான் தமிழ் மொழிபெயர்ப்பில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
* * *
பாப்லோ நெரூடாவின் கவிதைகளை மொழிபெயர்த்து ‘துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்’ என்ற தொகுப்பைக் கொண்டுவந்த ஆ.இரா. வேங்கடாசலபதி, முன்னுரையின் கடைசிப் பகுதியில் இப்படி எழுதுகிறார்:
ஸ்பானிய மொழியைக் கற்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கும் பொற்காலம் ஒரு நாள் வரலாம். அதுவரை ஆங்கிலவழி நிகழும் என் மொழிபெயர்ப்புகள் போன்ற அரைகுறைகளைத் தமிழ் வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய மொழிபெயர்ப்பாளரின் தமிழாக்கம் ஒன்றில் இந்த மாதிரி ஒரு வாக்கியம்: “அவன் சென்ற மாதம்தான் தன் மாமாவை இழந்திருந்தான்.” Had lost என்பது போன்ற ஒரு சொற்றொடர் “இழந்திருந்தான்” என்று மூல மொழியின் வாடையோடு வந்திருக்கிறது. அவர் ஆங்கிலத்திலிருந்து பெயர்க்கவில்லை, ஆங்கிலம் போன்ற வாக்கிய அமைப்பு கொண்ட இன்னொரு மொழியிலிருந்துதான் எழுதியிருக்கிறார். ஆனால் அவரது தமிழாக்கத்தில் இப்படிப் பல பகுதிகள் இயல்பான தமிழில் வரவில்லை.
அவரளவுக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தால் கூடப் பரவாயில்லை என்பதே நம் நிலைமை. இந்த மாதிரி வேலையை ஆங்கில மொழிபெயர்ப்பாளர் யாராவது செய்திருந்தால் ஒருத்தர் விடாமல் எல்லோரும் உரித்தெடுத்துவிடுவார்கள்.
நம் சூழலுக்கு, ஆங்கிலமல்லாத ஒரு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்ய அந்த மொழியைக் கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றால் பல படைப்புகள் மொழிபெயர்க்கப்படாமலே போக வாய்ப்பிருக்கிறது. நேரடியாக மூல மொழியிலிருந்து தமிழாக்கும் “பொற்காலம்” வரும் வரை நம்மவர்கள் குறைந்தது ஆங்கிலத்தையாவது கற்றுக்கொள்ள வேண்டும்.
* நானும் சில வருடங்களுக்கு முன்பு காஃப்கா கதைகளையும் பெர்ட்டோல்ட் பிரெக்த்தின் கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறேன். இப்போதும் மொழிபெயர்க்க மனசாட்சி தடுக்கிறது.
சுய நேர்மை
பாடாவதி வங்கி ஒன்றில் வைத்திருக்கும் கணக்கிலிருந்து பணம் எடுக்க ஏ.டி.எம். போனேன் நேற்று.
எனக்கு முன்பு ஒருவர் உள்ளே போய் கார்டைப் போட்டுப் போட்டு விளையாடிக்கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்போது சிம்புட் பறவை என்று வர்ணிக்கத் தக்க தும்பி சைஸ் பூச்சி ஒன்று சுற்றிச் சுற்றி வந்தது. அதன் தொந்தரவிலிருந்து தப்பிப்பதெங்ஙனம் என்று யோசித்தவாறு நான் நின்றிருக்கையில் அந்த மனிதர் ஒரு வித நிம்மதியுடன் வெளியே வந்தார்.
நான் உள்ளே போய்க் கொஞ்ச நேரம் கழித்துத்தான் கவனித்தேன். பூச்சியும் உள்ளே வந்துவிட்டிருந்தது. வேலை முடிந்து வெளியே போன பின் திரும்பிப் பார்த்தால் பூச்சி இன்னும் ஏ.டி.எம். பூத்திலேயே இருந்தது.
நான் மட்டும் சமூகப் பொறுப்போ சக மனிதர்களின்பால் இரக்கமோ இல்லாமலிருந்தால் இந்த அனுபவத்தைக் கவிதையாக்கியிருப்பேன்.
டைமண்டு கவிதை 2
இதுவும் அதே காலகட்டத்தில் எழுதிய வைரமுத்துப் பகடி. செய்தித் தாளில் வெளிவரும் எந்தக் கெட்ட நிகழ்வையும் பற்றிக் கவிதை எழுதிவிடுவார்கள். ஊடகம் அமுக்கி வைக்கும் பல அவலங்களை எழுத மாட்டார்கள். பாபர் மசூதி இடிப்பு பற்றி வைரமுத்தார் இந்தியா டுடேயில் அருளிய ஒரு கவிதையின் ரீமேக் இங்கே.
அயோத்தி ராமன் முறைக்கிறான்
மனைவியின் அடி உதை
முடிந்திட வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மச்சினி கோபம்
துடைக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மாமியார் கொழுப்பை
அடக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மகனை ஸ்கூலில்
சேர்க்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
ட்யூஷன் டீச்சரை
மடக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மெட்ரோ வாட்டர்
பிடிக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மாட்டீர்கள் சேவகரே
மாட்டீர்கள்!
படமெடுக்கும் பாம்பு
கலைப் படமா எடுக்கும்?
வெடிக்கும் மதப் போர்
தீயிடை வைக்கோல் போர்.
சுதந்திர இந்தியா
இன்பத்தின் அந்தியா?
மதமென்னும் வேதாளம்
பண்பாட்டின் பாதாளம்.
எப்படிக் குறைதீர்ப்பீர்
இந்தியத் தலைவர்காள்?
மாட்டீர்கள் தலைவர்காள்
மாட்டீர்கள்!
கூவத்தை நோக்கி
நடைபோடும் எருமை
அதைத் தூர்வாறவா போகிறது?
அந்தக் கூவத்தில்தானே
நீங்கள்
லட்சியப் படகுகளை விடுகிறீர்கள்.
நீங்கள் அள்ளிப் பூசிக்கொள்ளவே
செய்வீர்கள்
இங்கே சீமை சென்ட்டு
கிடைக்கும் வரை.
நீங்கள் மிளகாய் அரைக்கவே
செய்வீர்கள்
இங்கே வழுக்கையர் கூட்டம்
குனியும் வரை.
இங்கே வறுமைக் கோட்டின்
கீழ் நான்கு கோடி மக்கள்
என்ற நாடாளுமன்றமே!
அட்சக் கோட்டின்
கீழ் எண்பது கோடி!
அதை ஏன் அறிவிக்கவில்லை?
மதம் ஒரு பேமானி
மதம் ஒரு சோமாறி
சோமாறியோடு என்ன பாட்டில் யுத்தம்?
எப்போது அந்தக் கட்டிடத்தின் மீதும்
பண்பாட்டின் மீதும்
ஆசிட் பல்பு விழுந்ததோ
அன்று முதல்
கூவ நதி
கசப்பாக ஓடுகிறது!
அன்று மண்ணுருண்டை
அடித்துவிட்டு கூனியை முறைத்த பின்பு
ராமன் இப்போதுதான் இரண்டாம் முறையாக
முறைக்கிறான்.
மாண்புமிகு மதவாதிகளே!
சிறு கேள்வி கேட்கிறேன்
செவி தருவீரா?
அஞ்சாதீர்கள் தலைவர்களே,
திருப்பிக் கொடுத்துவிடுவேன்.
மனிதர்களிடம் வாங்கிய காற்றை
மரங்கள் திருப்பிக் கொடுக்கவில்லையா?
மீனவர்களிடம் வாங்கிய உப்பை
கடல் திருப்பிக் கொடுக்கவில்லையா?
அயோத்தி ராமன் அவதாரமெனில்
அவன் பிறப்புமற்றவன் இறப்புமற்றவன்.
ராமனின் பிறப்புச் சான்றிதழ்
உம்மிடமுண்டா?
இறப்புச் சான்றிதழாவது உம்மிடம்
உண்டா?
பிறக்காதவனுக்கு ஏன்
பிறந்த நாள் கொண்டாடுகிறீர்?
இறக்காதவனுக்கு ஏன்
கருமாதி செய்கிறீர்?

