குமாரின் கதை

கி.பி. 2010-இல் வெளிவரப் போகும் எனது நாவலின் முதல் அத்தியாயத்தை இங்கு தருகிறேன். ‘விளக்கில் தொங்கும் வெளிச்சம்’ என்ற தற்காலிகத் தலைப்பைக் கொண்ட இந்நாவலை Faber & Faber பதிப்பிக்கும். இந்த நாவல் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏதாவது ஒரு முன்னணி பிலிம் மேக்கரால் திரைப்படமாகவும் வரும். சாகித்திய அகாதமி விருது கமிட்டி, please excuse.

* * *

அத்தியாயம் 1 - குமாரின் கதை

முன்னொரு காலத்தில் சென்னையில் சேல்ஸ் பிரிவில் குமார் என்பவன் வேலை பார்த்து வந்தான். குமார் தன் பெயருக்கேற்ப தங்கமானவனாக இருந்தான். இந்தக் கதை ஆரம்பித்தபோது குமாருக்கு 31 வயது. நடுவில் இரண்டு வருடம் நான் கதை எழுதுவதை நிறுத்தியிருந்தேன். கடன் தொல்லை. தங்கைகள் திருமணம். அப்பா, அம்மா பிக்கல் பிடுங்கல். கதை எழுதும் ஆர்வமே போய்விட்டது. முதல் தங்கையை ஒரு முன்வழுக்கைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்ததில் மனப்பாரம் தீர்ந்தது. அந்த சந்தோஷத்தில் நான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

எனக்கே தெரியாமல் குமாருக்கு 33 வயதாகிவிட்டிருந்தது. குமார் நாலு பேர் மதிக்கும்படியான சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாலும் அவன் தன் பார்வையில்லாத தங்கைக்குத் திருமணம் செய்து வைக்கவும் தன் விதவைத் தாயை மேற்கொண்டு படிக்க வைக்கவும் அந்தச் சம்பளம் போதவில்லை.

இந்த சமயத்தில்தான் தெய்வாதீனமாக அவனுக்குத் தன் அப்பாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனது அப்பாவுக்கு குமாரின் தங்கமான குணம் பிடித்துப் போனது. அப்போது முதலாம் உலகப் போர் நடந்து முடிந்திருந்தது. ஹிட்லர் மெல்ல மெல்லப் பெரிய ஆளாகிக்கொண்டிருந்தான். கிழக்கு ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவிக்கொண்டிருந்தது. ஹிட்லர் தனது கட்சிக்காரர்களுடன் கொலோனில் பேரணி போகும் அதே நேரம் நான் அண்ணா சாலையில் தற்செயலாக சந்தித்த என் அலுவலக சகா சுப்பிரமணியத்திடம் ஒரு மரியாதைக்காக “சட்டை புதுசா?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

1920 வாக்கில் இந்தியா-பாகிஸ்தான் ஒரே நாடாக இருந்தது. அதனால் லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் அப்போது இந்தியாவில்தான் இருந்தார்கள். குமாரின் அப்பாவும் அவர்களில் ஒருவர். நல்ல செல்வந்தர், ஆனால் பாகிஸ்தானியர். அவருக்குப் பிடித்த ஒரே இந்து என்றால் அது குமார்தான்.

* * *

அதோடு எக்ஸ்டிராக்டு முடிந்தது. மொத்தம் 16 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன். எம்.எஸ். வேர்டில் 11 பக்கம் வருகிறது. நாவல் என்று சொல்லுமளவுக்கு நீளமாக எழுத வராவிட்டால் குறுநாவல் என்று டிக்ளேர் செய்துவிடுவேன்.

கவிதை என்பது யாதெனில் (கவிதை)

ஒரு
அல்லது
பல

நீண்ட
அல்லது
சிறிய

பத்தியை
அல்லது
பத்திகளை

சில
அல்லது
பல
வாக்கியங்களாக

விநி
யோகித்
தலே
கவி
தை.

குழாயிலிருந்து
காலி பக்கெட்டினுள்
சொட்டும் மழைத் துளிகளென
படிமப் பிதற்றல்கள்
தேவையற்றும் ஒலிகேடுகளோடும்
பன்மையின் மிகுதிகளோடும்
துளிர்க்கின்றன.

முன்னிலையை விளித்துப் பேசும் தன்மையாக நீயும்
தன்மை எழுத்து மாறித் தனிமையாகிய
முன்னிலை நானும்
குழம்பிக் குழப்பும் சொல்லின்
பாம்புச் சட்டை நம் கவிதை.

உணர்ச்சியின் வெளி அமைதி
கடைசி வரிகளில்.

உணர்ச்சிகளின்
வடிவம்
கவிதை.

கவிதையின்
வடிவம்
செங்குத்து.

முற்போக்குக் கற்பனை

இந்திய யாஹூ வலைவாசலின் முகப்பில் இந்த லீவைஸ் ஜீன்ஸ் விளம்பரத்தைப் பார்த்தவுடன், அபு கிரைப் காட்சிகள்தான் நினைவுக்கு வந்தன.

levis.jpg

இது பெண்ணுக்கு உள்ள அதிகாரம், தன் உரிமைகளை வலியுறுத்திக்கொள்ளும் குணம் (assertiveness) போன்றவற்றைக் காட்டுவதாக விளம்பரக்காரர்கள் சொல்லிக்கொள்வார்கள். Indulgence என்றும் ஒரு வார்த்தை சொல்வார்கள்.

ஆனால் என் கண்ணுக்கு வக்கிரம்தான் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையாகத் தெரிகிறது. ஃபாசிச வக்கிரம் என்றும் சொல்லலாம்.

விளம்பரத் தமிழ்

மோசமான மொழிபெயர்ப்பின் குணாதிசயங்களில் ஒன்று, மொழிபெயர்ப்பைப் பார்த்து மூலத்தை ஊகிக்க முடிவது. ஓர் உதாரணம், சில மாதங்களுக்கு முன் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பார்த்த விளம்பர டைட்டில் -

“அழகாக நோக்குங்கள்”

அதாவது “Look beautiful”. நம்ப முடியவில்லையா? தமிழ் விளம்பரங்களைப் பெரும்பாலும் படிக்காதவர்களுக்கு ஒரு தகவல்: இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

விளம்பர வாசகங்களை உருவாக்குபவர்கள் ஆங்கிலத்திற்கு மட்டுமே பொருந்துகிற மாதிரி ஒரு ‘காப்பி’யைத் தயார் செய்துவிட்டு எல்லா இந்திய மொழிகளிலும் (”vernacular”) அதே மாதிரி வர வேண்டும் என்று தங்கள் வசமுள்ள மொழிபெயர்ப்பாளர்களிடமோ வெளியே ஒரு மொழிபெயர்ப்பு ஏஜன்சியிடமோ கொடுப்பார்கள். இது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் தமிழில் மொழிபெயர்க்கப்படும் விளம்பரங்களின் தரத்தை வைத்துப் பார்த்தால் அவர்கள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் அமெச்சூர்களை வைத்தே வேலையை முடித்துக்கொள்வார்கள் போல் தெரிகிறது.

இன்னொரு உதாரணம் போன வாரக் குமுதத்திலிருந்து:

“கவனிக்கப் பெறுங்கள்.” (Get noticed.)

மேலே பார்த்த காமெடிக்கு இது எவ்வளவோ மேல் என்றாலும் ‘கவனத்தைக் கவருங்கள்’ என்பது போல
எளிமையாக சிந்தித்து மொழிபெயர்ப்பது கடினமான விஷயமாக இருக்கிறது. இது தலைப்புதான். அதற்குக் கீழே வரும் விளக்கத்தைப் படியுங்கள். இட்டாலிக்ஸ் மட்டும் நான் கொடுத்தது.

ஒலினா க்ரீம் ப்ளீச் உங்களைப் பளபளப்பாக்க மூன்று வழிகளில் செயல்படுகிறது. அது தேவையற்ற முடிகளை மென்மையான நிறமாக்கி சருமத்தின் நிறத்திற்கேற்ப மாற்றுகிறது. அதன் மாய்சரைசிங் இமோலியன்ட்ஸ், பேபி ஆயில் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. கூடுதலாக, அதன் மைக்ரோ ஆக்‍ஷன் ஃபார்முலா சருமத்தை மென்மையாகவும் மற்றும் இளமையாக வைத்து இளமையாக்குகிறது. அது ஆக்டிவ் ஆக்சிஜனை வெளியிட்டு சருமத்தை அழகாகவும், புதுப்பொலிவுடனும் வைக்கிறது. பொதுவான மற்றும் ப்ரூட் ஆக்டிவ் வேரியன்ட்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும் மற்றும் இரண்டாவது பார்வைக்காகப் பார்த்திருக்கவும்.

இதில் எவ்வளவு ஒருமை-பன்மைக் குழப்பங்கள், வாக்கிய அமைப்புக் குழப்பம், ஆங்கில வாக்கிய அமைப்பு போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன!

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பல விதமாக எதிர்மொழிபெயர்ப்பு (back translation) செய்து பார்த்தும் “இரண்டாவது பார்வைக்காகப் பார்த்திருப்பதன்” பொருளை ஊகிக்க முடியவில்லை! இரண்டாவது பார்வை second look/glance என்று தெரிகிறது. அதற்கு மேல் ‘இறந்த முனை’தான்.

தமிழைப் படு முரட்டுத்தனமாகக் கையாள்பவர்களிடம் ‘மற்றும்’ என்ற வார்த்தை அடிபட்டு சாகிறது. மேற்கண்ட உதாரணத்தில் ‘மற்றும்’ என்ற சொல்லை மூன்று இடங்களிலும் தவிர்த்திருக்க முடியும். ஆனால் இம்மாதிரி ஆட்கள் ‘மற்றும்’-ஐ வைத்துத்தான் வண்டியோட்டுகிறார்கள். இவர்கள் ‘ஆகியவை’ என்ற சொல்லைக் கோனார் நோட்ஸில் படித்ததோடு சரி.

பொதுவாக விளம்பரங்களின் மொழியே ஓவர் பேத்தலாகவும் ஃபார்முலா, ஆக்சிஜன், ஹேலோஜன் என்று ஓவர் பீட்டராகவும் இருக்கும் (என் பர்சனல் ஃபேவரைட் “GermiCheck ஃபார்முலா”). ஆங்கிலமும் தமிழும் ஓரளவாவது தெரிந்திருந்தால்தான் இந்தக் குப்பையைக் கையாள முடியும். தமிழே தகராறு என்றால் கஷ்டம்தான்.

நான் என் செல்ஃபோன் கம்பெனியின் வாடிக்கையாளர் உதவிப் பிரிவுக்கு ஃபோன் போடும்போதெல்லாம் தமிழில் பேசுவேன். ஆனால் ஏ.டி.எம். போன்ற சென்சிட்டிவான சமாச்சாரங்களுக்கு எனது டீஃபால்ட் மொழி ஆங்கிலம்தான். இவர்களது தமிழ் மொழிபெயர்ப்பை விட ஆங்கிலம் யாருக்குமே எளிதாகப் புரியும்.

Next Page »

ஃபயர்ஃபாக்ஸ் இல்லையா?