• குட்டிப் பதிவு

    சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
    சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)


வண்ணத்துப்பூச்சியும் விசித்திர ஓவியனும்

(குழந்தைகளுக்கான மீபுனைவு)

மனித வாழ்க்கை போல் நீண்டு நெடிந்து சுழித்தோடும் ஒரு ஆற்றின் கரையில் அமைந்திருந்தது ஒரு வனம். அந்த வனத்தில் ஜம்பு என்றொரு வண்ணத்துப்பூச்சி இருந்தது.

பொதுப்புத்தியில் பதிந்துள்ள வண்ணத்துப்பூச்சிகளைப் போல் வண்ண-வடிவ விசித்திரங்களை கொண்டதல்ல நமது ஜம்பு. அது பிறவியிலேயே வெண்ணிறம் கொண்டதாக இருந்தது. மற்ற வண்ணத்துப்பூச்சிகள் வண்ணமயமாக இருந்ததைப் பார்த்து ஜம்புவுக்கு அசூயையும் விசனமும் ஏற்பட்டது.

தான் உலகில் தொட்டதில் எல்லாம் படைப்பூக்கம் துலங்கச் செய்த இயற்கைக்கு தன்னை படைக்கும்போது மட்டும் ஏன் பாரபட்சம் என வருந்தியது ஜம்பு. நியாயம்தானே?

வெறும் வெள்ளை நிறத்தால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஜம்பு ஆளானது. மலர் விட்டு மலர் தாவி மகரந்தம் உறிஞ்சும்போது ஜம்புவின் கண்ணீரால் தேனும் உப்பு கரித்தது.

நான் ஒரு வண்ணத்துப்பூச்சியா அல்லது ஒரு குட்டிப் பறவையா? ஜம்புவுக்குக் குழப்பமாக இருந்தது.

ஜம்புவுக்கு ஒரே ஒரு நண்பன் இருந்தான். வனத்தின் நடுவில் இருந்த ஒரு பெரிய மலையில் அமைந்திருந்த ஒரு சுனைக்கு அருகே ஒரு இளநீல மரம் வளர்ந்துகொண்டிருந்தது. அதுதான் ஜம்புவின் தோழன்.

வண்ணம் சார்ந்த வருத்தத்தை தனதாக்கிக்கொள்ளும் போதெல்லாம் அந்த இலைநீள மரத்தின் அடிவாரத்தில் ஓய்வெடுப்பதை ஜம்பு வழக்கமாகக் கொண்டிருந்தது.

நண்பனின் வேதனையைக் காண சகிக்காத மரம், விசித்திர ஓவியனை பற்றிக் கூறியது.

‘ஜம்பு, ஜம்பு, உனக்கு விசித்திர ஓவியன் உதவி செய்வான், தெரியுமா?’ என்றது இளநீல மரம்.

‘விசித்திர ஓவியனா? அட, யாரது? ஓவியன் என்றால் படம் வரைபவனா? எங்கிருக்கிறான்? எப்படி உதவுவான்?’ என்று கேள்விகளை அடுக்கியது ஜம்பு.

கேள்விகளால் திக்குமுக்காடிய இளநீல மரம் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு விசித்திர ஓவியனின் மாந்திரீக ஜாலத்தை விதந்தோதியது. அவன் இருக்கும் இடத்தை ஜம்புவுக்கு சொன்னது.

விசித்திர ஓவியன் தனக்கு வண்ணம் அளிப்பான் என்ற ஆவலில் ஜம்பு என்கிற வண்ணத்துப்பூச்சி பறந்தது, பறந்தது, பறந்துகொண்டே போனது. கடந்த காலத்தின் சுமை தந்த அழுத்தத்தில் பிறந்த வேதனையும் எதிர்கால நிவாரணத்தின் சாத்தியப்பாடு சார்ந்த நம்பிக்கையும் அது பொய்க்குமோ என்கிற பயமும் அதன் பாடலில் வெளிப்பட்டு எல்லா திசைகளிலும் எதிரொலித்தன.

வேகமாகப் பறக்க ஜம்பு என்ன பருந்தா? அது பல நாட்கள் செலவிட்டு வனத்தின் மறுபக்கம்  விசித்திர ஓவியன் வாழ்ந்த மர வீட்டை அடைந்தது.

மர வீட்டின் வாசலில் வீட்டைவிடப் பெரிதான ஒரு பாறை இருந்தது. அந்த பாறையின் மேல் ஒரு மனிதன் கையில் ஒரு கொத்து நெற்கதிர்களை பிடித்திருந்தான். அம்மனிதன் அந்தக் கொத்தை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறு இருந்தான்.

அவன் தலையில் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு வண்ணத்தில் இருந்தது. கண்கள் இரண்டும் வெவ்வேறு வண்ணங்களில் இருந்தன. அதே போலக் காதுகளும்.

அவனை பார்த்ததும் அவன்தான் விசித்திர ஓவியன் என ஜம்புவுக்குப் புலப்பட்டது.

‘விசித்திர ஓவியனே, விசித்திர ஓவியனே, எனக்கு வண்ணம் தருவாயா?’ என்று ஜம்பு கேட்டது.

பேச வாயைத் திறந்த விசித்திர ஓவியன், சட்டென நிறுத்தி ஜம்புவின் பெயரைக் கேட்டான். ஜம்பு தன்னை வனத்தில் எல்லோரும் அழைக்கும் பெயரான ‘ஜம்பு’ என்ற பெயரைச் சொன்னது.

‘ஜம்பு, ஜம்பு, நான் உனக்கு வண்ணம் தருகிறேன், நீ எனக்கு ஒரு பாடல் பாடுவாயா?’ என்று விசித்திர ஓவியன் கேட்டான். அவன் பற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் இருந்தது.

ஜம்புவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து ஒரு நீண்ட பாடலைப் பாடியது. ஜம்பு பாடப் பாட விசித்திர ஓவியன் நெற்கதிர் கொத்தைத் தூரிகையாகக் கட்டத் துவங்கினான்.

ஜம்பு பாடப் பாட மழை மேகங்கள் திரண்டன, பரஸ்பரம் மோதின, பெருமழை பெய்தது. ஜம்பு பாடலை நிறுத்தியது. மேகங்கள் விலகி கதிரவன் வெளிப்பட்டான். ஏழு வண்ணங்களுடன் வானவில்லும் மெல்ல வெளிவந்தது.

நெற்கதிர் தூரிகையை வானவில்லின் வண்ணங்களில் தோய்த்து வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளுக்கு வண்ணம் கொடுத்தான் விசித்திர ஓவியன்.

வண்ணமே இல்லாமல் வாழ்க்கையில் பலவித இன்னல்களுக்கு உள்ளான வண்ணத்துப்பூச்சி, விசித்திர ஓவியனுக்கு நன்றி சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு பறந்தது, பறந்தது, பாடிக்கொண்டே பறந்தது. ஆனால் இம்முறை அதன் பாடலில் விகசித்தது புது வாழ்க்கை அளித்த நம்பிக்கையின் புத்துணர்வு.

முற்றும்

அரைகுறைத் தமிழர்கள்

கீழ்க்கண்டவை கடந்த சில நாட்களில் தட்ஸ்தமிழ்.காமில் வந்த தலைப்புச் செய்திகள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை கண்ணில் படுகிறதா?

  • வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் – சென்னையில் இறக்கப்பட்ட விமானம்
  • போதையில் இருந்த ஏர் இந்தியா விமானி!
  • நயன்-பிரபுதேவா.. இடையே புகுந்த ஆயிஷா!
  • முக்காடு போட்டு வந்த புவனேஸ்வரி
  • ஹிஸ்பானோவை வாங்கிய டாடா
  • பெங்களூரில் கண் கலங்கிய வைகோ
  • சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா!
  • உயிருடன் உள்ளவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சி!
  • இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

சில செய்திகள் வேறு காரணங்களுக்காகக் கடுப்பேற்றினாலும் நான் சொல்ல வருவது மொழி விஷயம். இது என்ன அபத்தமான நடை? இந்தத் தலைப்புச் செய்திகள் எல்லாம் முடிவடையாத வாக்கியங்கள். ஒன்றிரண்டு தடவை என்றால் வெரைட்டிக்காக விட்டுவிடலாம். ஆனால் இப்படி வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்துவது அச்சுப் பத்திரிகைகளில் கூட ஒரு புதிய பழக்கமாகியிருக்கிறது. படிக்கும்போது பயங்கர ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.

என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி?

சமகால இதழியலில் எல்லோரும் எழுத்து கூட்டி பத்தி எழுதுகிறார்கள். எல்லோரும் பத்தி கட்டுரைகளை தொகுப்பாக்குகிறார்கள். ஆனால் பத்தி எழுத்தாளர்களில் எத்தனை பேர் என்னைப் போல் பிரபலத்தை அனுபவிக்கிறார்கள்? நான் பல முக்கிய நாவல்களை எழுதியிருக்கிறேன். குழந்தைகளைக்கூட விட்டு வைக்காமல் அவர்களுக்கும் புத்தகம் எழுதியிருக்கிறேன். எனினும் எனது பிரபலத்திற்கு பத்திதான் காரணம். குறைந்த உழைப்பில் நிறைந்த வருமானம் பத்தி எழுத்தில்தான் கிடைக்கிறது. இந்தப் பிரபலம் எல்லோருக்கும் வாய்க்காத காரணம் அவர்கள் நான் அல்ல என்பதே. எனது வெற்றியால் உந்தப்பட்டு பத்தி எழுத துவங்குபவர்கள் என்னைப் போலவே எழுதினால் ஓரளவு வெற்றியடையலாம். இப்போது அரிச்சுவடியை கற்போமா?

முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக்கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிசொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முடிக்க வேண்டும். உதாரணமாக ஒரு துவக்கம்:-

வாழ்க்கையை எல்லோரும் ஒரே விதமாக வாழ்வதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வெவ்வேறு அபிலாஷைகள் கனன்றுகொண்டிருக்கின்றன. கடந்த மாதம் ரயிலில் திருப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு சகபயணி* என்னை அடிக்கடி உற்றுப் பார்த்தபடி இருந்தார். அவர் என்னிடம் பேச விரும்பி கூச்சத்தால் தயங்குவது போல் தெரிந்தது. நானே அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன். நான் அவரது பள்ளி ஆசிரியர் ஒருவரை போல் இருந்ததாகவும் ஆனால் அந்த ஆசிரியருக்கு ஏழு கண்கள் என்றும் அவர் கூறினார்.

பேசிக்கொண்டிருந்தபோது என் சகபயணி தன்னை பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டார். அவர் திருச்சியில் விவசாயம் செய்துவந்தார். வருமானம் மிக குறைவு. செலவுக்கு காசில்லை. வசதியான பின்னணி இருந்த மனைவிக்கு வங்கியில் கணிசமான அளவு பணம் இருந்தது. ஆனால் மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட அந்தப் பெண்மணி தன் பணத்தை கோவில் குளங்களுக்கு வாரி வழங்குவதிலேயே செலவிட்டார். சொத்து மட்டும் கணவர் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். சகபயணி சொத்துக்காக மனைவியை ஏர் பில்லோவால் கொல்ல பலமுறை முயன்று தோல்வியடைந்திருக்கிறார். திருப்பூரில் கூடுதல் பஞ்சு வைத்த கனத்த தலையணைகள் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

அவர் கூறியது முழுவதையும் வியப்புடன் கேட்டேன். மனைவியை கொலை செய்ய காற்று தலையணையை பயன்படுத்தும் அளவிற்கு சமகால கணவர்கள் நிதர்சனத்திலிருந்து விலகி இருக்கிறார்களா? மனைவியை கொல்ல வேறு வழிகள் தெரியாதவனை சமூகம் அங்கீகரிக்க வேண்டுமா? (இப்படியே இன்னும் இரு பாராக்கள்)

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சச்சரவுகள் திருமணம் என்கிற சடங்கு தோன்றிய காலத்திலிருந்தே புழங்கி வருகிறது. பல சமயங்களில் மனைவியின் கொலையே சுமுகமான தீர்வாக இருக்கிறது. அவ்வாறு கொலை செய்த பின் ஒரு கணவனுக்கு ஏற்படும் போலீஸ் நடவடிக்கை போன்ற நடைமுறை சிக்கல்கள் எண்ணற்ற புத்தகங்களின் கருவாகியிருக்கின்றன. (இப்படியே இன்னும் சுமார் ஆறு பாராக்கள்)

* உங்களுக்கு சகபயணி யாரும் இல்லாதிருந்தால் மட்டுமே இப்படி எழுத வேண்டும். நீங்கள் அந்த பயணத்திற்கே சென்றிருக்கவில்லை என்றால் இன்னும் நல்லது.

மனைவியை கணவன் கொல்வது பற்றி உலக இலக்கியம் என்ன சொல்கிறது? உங்களுக்கு தெரியவில்லை என்றால் வலைதளத்தில் தேடுங்கள். எடுத்துக்காட்டாக டபிள்யூடபிள்யூ டாட்காம் கூகுளில் male person killing wife latin american literature only என தேடுங்கள். தேடலில் தானாக வந்து மாட்டும் தகவல்களையும் சேர்க்கலாம். தகவல் கிடைத்தபின் அதை மேற்கண்ட சம்பவத்துடன் இணைக்க வேண்டும். கதையின் முடிவில் ஆழமான கருத்துகளை மறக்கக்கூடாது….

அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பரோஸின் ‘நேக்கட் லஞ்ச்’ (Naked Lunch) என்கிற நாவலில், நாயகன் வில்லியம் லீ-க்கு பூச்சி மருந்து அடிப்பதால் ஏற்படும் மூச்சு திணறல் அவனுள் போதை மற்றும் காம உணர்வை கிளறுகிறது.

இத்தகைய புலனின்பம் சார்ந்த அக தேடலின்போது தனது மனைவியை தவறுதலாக பூச்சி மருந்தால் கொல்கிறான். இதனால் ஏர் பில்லோவால் அவளை அமுக்கி கொல்லும் திட்டம் முறியடிக்கப்படுகிறது (ஏர் பில்லோவால் கொல்ல முடியாது என்றாலும் சர்ரியலிச நாவல் என்பதால் இதில் யதார்த்தம் தவிர்க்கப்படுகிறது). வில்லியம் மனைவியை திட்டமிட்டு கொன்றதாக போலீஸ் சந்தேகிக்கிறது. காவல் துறை பெரிய அதிகாரி அவன் வீட்டிற்கு வந்து, ‘உங்கள் மனைவிக்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா?’ என்று கேட்கிறார்.

போலீசிடமிருந்து தப்பிக்க நாயகன் தேசாந்திரம் போகிறான். பிடிபடும் கோர அச்சத்தின் தீவிரம் தந்த வேதனை அவனை ஒருபுறம் நெருக்க, மறுபுறம் வாழ்க்கை அவனுக்கு பலவித அனுபவங்களை புகட்டியபடி இருக்கிறது.

இந்தப் பாடங்களை நாமும் தினமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கை கற்பனை கதாபாத்திரங்களுக்கும் நிஜமனிதர்களுக்கும் வித்யாசம் பார்ப்பதில்லை. சூரிய ஒளி தெருவிலுள்ள மழைநீர் குட்டைகளில் பிரதிபலிப்பது போல் என் சகபயணியின் கனவு பல கணவர்களின் மனதில் புழங்குகிறது. அடைய இயலாத ஒரு குதிரைத் தந்தமாகவே அந்த கனவு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்குகிறது. (இதே ரீதியில் இன்னும் இரு பாராக்கள்)

இலக்கிய கதை முடிந்தது. இப்போது உலக சினிமா படத்தை பற்றி எழுத வேண்டும். தரமான படமாக இருக்க தேவையில்லை. வெளிநாட்டவரால் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் போதும். அழகியல் நேர்த்தி துடித்து வெளிக்கிளப்பும் உளவியல் ஒருங்கிணைப்புக்காக அதே பார்முலாவை பின்பற்றுங்கள்….

1991-ம் ஆண்டு ஷோஹை இமமுரா இயக்கி டோக்கியோவில் வெளிவந்த ‘த ஈல்’ (The Eel) என்ற படம் கணவர்களின் தீராத கொலையுணர்வைப் பற்றியது. கோஜி யகுஷோ நடித்த இந்தப் படம், மனைவியின் ரகசிய சுரோணித சிநேகிதத்தை கண்டுபிடிக்கும் ஒரு கணவன் அவளை கொன்றுவிட்டு சிறைக்குச் சென்று பின்னர் ஜாமீனில் வெளிவந்து முடிதிருத்து நிலையம் அமைத்து இயல்பு வாழ்க்கையை மீட்க முயல்வதையும் அவன் கடையில் வேலைசெய்ய வரும் ஒரு பெண் அவன்பால் ஈர்க்கப்படுவதையும் பற்றியது.

டகுரோ யமாஷிட்டா …. (இரண்டு பாராக்களில் கதையை விளக்குங்கள்)

டகுரோவும் கெய்கோவும் சுய வாழ்க்கையின் அக நெருக்கடிகளை தத்தமது வழிமுறைகளில் எதிர்கொள்ளும் மனப்பான்மையின் இரண்டு மாறுபட்ட வடிவங்கள். சமூகம் அவர்கள் பலவீனத்தை அறிந்து பந்தாடுகிறது. உலக சினிமா பாத்திரங்கள் என்பதால் அவர்களுக்கு அக தேடல், அடையாள சிக்கல்களும் உள்ளன. (முடிந்தால் வளர்த்துங்கள்)

அடுத்து பெட்டிச் செய்தி இருந்தால் அதில் உங்களுக்கு பிடிக்காத யாரை பற்றியாவது எழுதுங்கள். அவர்களைப் பற்றி எழுதி கேவலப்படுத்த வேறு சந்தர்ப்பம் வாய்க்காது. எடுத்துக்காட்டாக எனக்கு சிட்னி ஷெல்டனை பிடிக்காது. அவரைப் புகழ்ந்து பதினைந்து வரிகள் எழுதினால் வேலை முடிந்தது.

இடம் இருந்தால் – அனேகமாக இருக்காது – ஒரு ஜென் கதையை சேர்த்துக்கொள்ளுங்கள். வலைதளத்தில் தேடினால் கிடைக்கும். கிடைக்கவில்லை என்றால் நீங்களே எழுதிவிடலாம். மாதிரிக்கு:-

“குருவே, முரண்களை சேர்க்கமுடியுமா?” என ஓர் இளந்துறவி லி மு பாயிடம் கேட்டார்.

தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த லி மு பாய் கொதிக்கும் வெந்நீரை அவர் முகத்தில் விட்டெறிந்து, “முடியாமலா?” என்றார்.

யார் வேண்டுமானாலும் பத்தி எழுதலாம். ஆனால் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். பத்திதானே என்று அலட்சியமாக எழுதக்கூடாது. எழுத்து எளிமையாகவும் காத்திரமாகவும் இருக்க வேண்டும். சிலருக்கு எளிமை பிரம்ம பிரயத்தனம் செய்தாலும் கைவராது. வேறு சிலருக்கு சிக்கலான எழுத்து மட்டுமே கைவரும். இதற்கு உதாரணங்களை எனது புத்தகங்களின் பின்னட்டை விளக்கங்களில் பார்க்கலாம்.

வெளிநாட்டவர்களின் பெயர்களை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக எழுத வேண்டும். உதாரணமாக, அன்னா கிரிகோரிவ்னா, அன்னா கிரிகோர்வினா, அன்னா கிரிகிரிவேனா ஆகிய மூன்று பெயர்களும் ஒரே நபரைக் குறிக்கின்றன. அதே சமயத்தில் மூன்று பெயர்களும் தவறாக எழுதப்பட்டுள்ளன. இது முக்கியம்.

தகவல் பிழைகளில் கவனம் தேவை. ஆங்கிலத்தில் Authenticity என்கிறார்கள். ஒரு கட்டுரைக்கு ஆதண்டிசிடி தருவது தகவல் பிழைகளே. ஆகவே உங்கள் பத்தியிலோ அல்லது கட்டுரையிலோ குறைந்தது இரண்டு தகவல் பிழைகளாவது இருக்க வேண்டும். தகவல் பிழைகள் இல்லை என்றால் கட்டுரை திருப்பி அனுப்பப்படலாம். இது என்னுடைய அனுபவம். இலக்கணப் பிழைகளும் எழுத்து நடையை மெருகேற்றும், ஆனால் அவை கட்டாயமல்ல.

இறுதியாக, மிதமிஞ்சிய தன்னம்பிக்கையைக் கைகொள்ளுங்கள். அது என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சொத்து. எனக்கு எல்லாம் தெரியும் என முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து சொல்லிக்கொள்ளுங்கள். என்னைப் போல் எழுத அபிலாஷித்தால் உங்களை உலக எழுத்தாளர்களின் வரிசையில் ஒருவராக நினைத்துக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் அடித்தளமான ஒரு விதிமுறை உண்டு. அது:- பத்தி எழுத்து பத்தி எழுத்தாக இருக்க வேண்டும்.

கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை

என் கவிதைத் தொகுப்பு வரும்போது கீழ்க்காண்பதை முன்னுரையாகப் போட்டுக்கொள்ளவிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்புதான் முதலில் வரும் என்று நினைக்கிறேன்.

*

ஒரு நல்ல கவிதையை எழுதுவதில் கவிஞனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது, அந்தக் கவிதையை அவனது பிற கவிதைகளுடன் சேர்ந்து ஒரு தொகுப்பாகப் பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிதான். அதனை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.

கவிதை எங்கும் இருப்பது. அதை எழுதுவது கவிஞனின் பொறுப்பு. எழுதப்படும் வரை கிடைப்பதில்லை கவிதையின் இருப்பிற்கு நியாயம்.

கவிதை அதன் மொழியில் எழுதப்படுவதும் முக்கியம். இல்லையெனில் கவிதை கவிதையாக இல்லாமல் போய்விடும். கவிதை மொழி என்பது தமிழ், ஆங்கிலம், கொங்கணி, பிரெஞ்சு போல ஒரு மொழிதான். அதன் எழுத்துகள் வேண்டுமானால் தமிழ் எழுத்துகளாக இருக்கலாம். ஆனால் அதற்கும் தனியாகச் சொற்களும் வாக்கிய அமைப்பு விதிகளும் இலக்கணமும் உண்டு.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் கவிதை மொழியைக் கற்றுக்கொள்ளும் அனுபவத்தின் பதிவுகள் எனலாம். நடமாடும் படிமத் தொழிற்சாலைகளாகப் பிரகாசிக்கும் சிலருக்கு அந்த மொழி எழுதத் தொடங்கும்போதே கற்றுக்கொள்ளத் தேவையில்லாமல் எளிதாகக் கைவருவதோடு அவர்கள் பல தொகுப்புகள் கொண்டுவந்து புத்தக மதிப்புரையாளர்களாகவும் நிறுவப்பட்டுவிடுவது இன்றைய வரலாறு.

ஒரு கவிஞன் தனது முதல் தொகுப்பைப் பிரசவிக்கும்போது கன்னித்தன்மையை இழக்கிறான். எண்ணிறந்த தமிழ்க் கவிஞர்களால் ஊக்குவிக்கப்பெற்று கவிதை எழுதத் தொடங்கிய நான் கவிஞன் என்கிற முறையிலே இத்தொகுப்பின் மூலம் எனது கன்னித்தன்மையை இழப்பதில் நெகிழ்ச்சியடைகிறேன்.

கவிதையை அணுவணுவாக ரசிக்கும் என் நண்பர்களின்றி இந்தத் தொகுப்பு சாத்தியமாக வாய்ப்பிருக்க முடியாது. அவர்களுக்கு நான் பெரிதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.

மேப் போட்றவரு

சில செய்திக் கட்டுரைகளைப் படித்தால் அவற்றின் சோகத்தை மீறி சிரிப்பு வருகிறது. கல்பாக்கம் கடற்கரையில் ஒரு ருஷ்யப் பொறியியலாளரும் அவரது மகளும் தாக்கப்பட்டது பற்றி ஐ.பி.என்.-லைவில் ஒரு IANS கட்டுரை வந்திருக்கிறது.

பொறியியலாளர் தாக்கப்பட்டதையும் அவரது மகள் மானபங்கப்படுத்தப்பட்டதையும் சொல்லிவிட்டு, காவல் துறை விசாரணை செய்துவருகிறது என்பதோடு முடித்துக்கொள்ளாமல் இப்படி நாலு பாரா:

According to officials of the power project, there are over 100 Russian engineers working at the Kudankulam nuclear power project.

The Nuclear Power Corporation of India Ltd (NPCIL) is working on the 2×1000 MW project with Russian technical assistance.

The first unit is expected to be commissioned early next year.

As per the deal between India and Russia, two more reactors of similar or even slightly higher capacity will come up at Kudankulam.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிக்கிறார்கள். அந்த நாலு பாராவைத் தனி செய்தியாகப் போடுவதற்கு மேட்டர் போதாதோ என்னவோ. போதாமைக்கு சைடில் தமிழ்நாடு வரைபடம் வேறு. புனே, சட்டீஸ்கர் கட்டுரைக்கெல்லாம் மேப்பைப் போடக் காணோம்.