June 25, 2010

கொரட்டூர் கொலை வழக்கு

Posted by : சாத்தான்

அகதா க்றிஸ்டி என்ற மகத்தான மர்மக் கதாசிரியர் இவ்வளவு காலமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படாதிருந்த காரணத்தை சமீபத்தில் ஊகித்தேன். காப்பிரைட் போக, நமது மொழிபெயர்ப்பாளர்கள் கைவைத்து சுட்டுக்கொண்டதுதான் காரணமாக இருக்கும். சிட்னி ஷெல்டனைவிட அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது கடினம். முயன்ற பலர் அவருடைய மொழிநடை, நகைச்சுவை, பொதுவாகத் தூக்கலாகத் தெரியும் பிரிட்டிஷ் தன்மை, மற்றும் இன்ன பிற மொழிபெயர்க்கவியலாத்தன்மைகள், எல்லாவற்றையும் உணர்ந்து கைவிட்டிருப்பார்கள்.

ஆனால் இதெல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள் கவலை. குத்துமதிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எதுவும் காணப்படாது. இப்போது எழுத்துக்களில் எது இருந்தாலும் அச்சிட்டுப் பின்பக்கம் ஒரு விலையைப் போட்டுவிடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது போல. உதாரணமாக, கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் என்பவரின் மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் வெளியீட்டில் அகதா க்றிஸ்டியின் The Hollow என்ற நாவல். முதல் பத்தியைப் படித்தின்புறுக -

வார இறுதியின் ஓய்வினையும் பொழுதுபோக்கினையும் நெருங்கிப் புலர்ந்துக் கொண்டிருந்த அந்த வெள்ளிக் கிழமைக் காலையில், கமிஷனர் ஹென்றியின் பரந்து விரிந்த பங்களாவான ‘ஹாலோ’வில் அனைவரும் இன்னும் கொட்டும் பனியின் குளிர் தாக்கத்தால் படுக்கையில் சுருண்டே கிடக்க, தன் நீல விழிகளைப் பட்டென திறந்து, தனக்கே உரிய உடனடி சுறுசுறுப்புடன் மெத்தையிலிருந்துத் துள்ளி எழுந்தார், லூசி ஆங்கட்டேல். நெளிந்து, சோம்பி, குளிரால் வெடவெடத்து, இன்னும் கொஞ்சம் படுத்திருப்போமா என்று படுக்கையைத் திரும்பித் திரும்பிப் பார்த்து – என, எந்த மந்த நடவடிக்கையும் இல்லாமல், தன் பிரத்யேக முத்திரைச் சக்தியோடு கிளம்பினார் லூசி. முக்கியமான ஒரு விஷயம் குறித்து உடனடியாக ஆலோசனை செய்து உரையாட, எழுந்த குழந்தையின் துள்ளல் போன்ற யாராலும் ஈடுகொடுக்க முடியாத ஒரு வேகம் லூசிக்குள் புரண்டது. ஆலோசனைக்கு, நேற்று இரவு ஹாலோ வந்திறங்கியிருந்த இவரின் ஒன்று விட்டு சகோதரி மிக்டே-வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். படுக்கையிலிருந்து இறங்கிய லூசி, இந்த வயதிலும் இன்னும் பளபளப்புடன் மிளிரும் தன் இருதோள்களையும் அசட்டை கலந்து பெருமிதமாய்ப் பார்த்துக் கொண்டு, மிக்டே அறை நோக்கிப் பாய்ந்தார். தன்னுடைய இயல்பான வழக்கப்படி, மிக்டேவுக்கும் தனக்குமான சம்பாஷணையைத் தனது வளமிக்கக் கற்பனைத் திறனால் தன்னுள்ளேயே நிகழ்த்தி, அதற்கு மிக்டே தரும் பதில்களையும் ஊகித்துக் கொண்டு, சம்பாஷணையின் போது எப்படியெல்லாம் கொடிகட்டித் திகழலாம் எனும் திட்டமிடலூடே, மிக்டே அறை வாயிலை அடைந்தார்.

ஒரு பத்தியில் தனிநபராக ஒரு மொழிப் புரட்சியே நடத்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். தெளிவு, தர்க்க ரீதியாக வாக்கிய அமைப்பு, தகுந்த நிறுத்தக்குறிகள், சொலவடைகள் என்று எதையும் மிச்சம் வைக்காமல் கொந்தித் தள்ளியிருக்கிறார் இவர். மூல வடிவமோ எளிமையின் மறுவடிவம். மொழிபெயர்ப்பாளர்தான் வேண்டாத விஷயங்களைச் சேர்த்து செறிவூட்டியிருக்கிறார். Midge என்ற பெயர் மிக்டே என்றே புத்தகம் முழுவதும் வருகிறது. “…!” நிறைய உண்டு. அகதா க்றிஸ்டி ரசிகன் என்ற முறையில் பாதி நாள் கொலைவெறியில் அலைந்துகொண்டிருந்தேன்.

நாவலின் தலைப்பு ‘மன்மதக் கொலை’! கண்ணதாசன் பதிப்பகம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி நேரடியாக அச்சகத்திற்கு அனுப்பிவிடும் போலிருக்கிறது.

அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது அசாத்திய காரியமல்ல. ஆனால் செய்பவருக்குத் தொழில் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்த மாதிரி எழுதினால் எந்த மர்மமும் அவிழ வாய்ப்பில்லை.

“தனது ஆழ்ந்த நிம்மதியான ஒரு மனோஹரக் காலைத் தூக்கத்திலிருந்து , அதிருப்தியாய் விழித்துக் கொண்டார் மிக்டே.”

இப்படியே 424 பக்கம். விலை ரூ. 100.


October 21, 2009

அரைகுறைத் தமிழர்கள்

Posted by : சாத்தான்

கீழ்க்கண்டவை கடந்த சில நாட்களில் தட்ஸ்தமிழ்.காமில் வந்த தலைப்புச் செய்திகள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை கண்ணில் படுகிறதா?

  • வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் – சென்னையில் இறக்கப்பட்ட விமானம்
  • போதையில் இருந்த ஏர் இந்தியா விமானி!
  • நயன்-பிரபுதேவா.. இடையே புகுந்த ஆயிஷா!
  • முக்காடு போட்டு வந்த புவனேஸ்வரி
  • ஹிஸ்பானோவை வாங்கிய டாடா
  • பெங்களூரில் கண் கலங்கிய வைகோ
  • சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா!
  • உயிருடன் உள்ளவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சி!
  • இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

சில செய்திகள் வேறு காரணங்களுக்காகக் கடுப்பேற்றினாலும் நான் சொல்ல வருவது மொழி விஷயம். இது என்ன அபத்தமான நடை? இந்தத் தலைப்புச் செய்திகள் எல்லாம் முடிவடையாத வாக்கியங்கள். ஒன்றிரண்டு தடவை என்றால் வெரைட்டிக்காக விட்டுவிடலாம். ஆனால் இப்படி வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்துவது அச்சுப் பத்திரிகைகளில் கூட ஒரு புதிய பழக்கமாகியிருக்கிறது. படிக்கும்போது பயங்கர ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.


September 19, 2009

கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை

Posted by : சாத்தான்

என் கவிதைத் தொகுப்பு வரும்போது கீழ்க்காண்பதை முன்னுரையாகப் போட்டுக்கொள்ளவிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்புதான் முதலில் வரும் என்று நினைக்கிறேன்.

*

ஒரு நல்ல கவிதையை எழுதுவதில் கவிஞனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது, அந்தக் கவிதையை அவனது பிற கவிதைகளுடன் சேர்ந்து ஒரு தொகுப்பாகப் பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிதான். அதனை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.

கவிதை எங்கும் இருப்பது. அதை எழுதுவது கவிஞனின் பொறுப்பு. எழுதப்படும் வரை கிடைப்பதில்லை கவிதையின் இருப்பிற்கு நியாயம்.

கவிதை அதன் மொழியில் எழுதப்படுவதும் முக்கியம். இல்லையெனில் கவிதை கவிதையாக இல்லாமல் போய்விடும். கவிதை மொழி என்பது தமிழ், ஆங்கிலம், கொங்கணி, பிரெஞ்சு போல ஒரு மொழிதான். அதன் எழுத்துகள் வேண்டுமானால் தமிழ் எழுத்துகளாக இருக்கலாம். ஆனால் அதற்கும் தனியாகச் சொற்களும் வாக்கிய அமைப்பு விதிகளும் இலக்கணமும் உண்டு.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் கவிதை மொழியைக் கற்றுக்கொள்ளும் அனுபவத்தின் பதிவுகள் எனலாம். நடமாடும் படிமத் தொழிற்சாலைகளாகப் பிரகாசிக்கும் சிலருக்கு அந்த மொழி எழுதத் தொடங்கும்போதே கற்றுக்கொள்ளத் தேவையில்லாமல் எளிதாகக் கைவருவதோடு அவர்கள் பல தொகுப்புகள் கொண்டுவந்து புத்தக மதிப்புரையாளர்களாகவும் நிறுவப்பட்டுவிடுவது இன்றைய வரலாறு.

ஒரு கவிஞன் தனது முதல் தொகுப்பைப் பிரசவிக்கும்போது கன்னித்தன்மையை இழக்கிறான். எண்ணிறந்த தமிழ்க் கவிஞர்களால் ஊக்குவிக்கப்பெற்று கவிதை எழுதத் தொடங்கிய நான் கவிஞன் என்கிற முறையிலே இத்தொகுப்பின் மூலம் எனது கன்னித்தன்மையை இழப்பதில் நெகிழ்ச்சியடைகிறேன்.

கவிதையை அணுவணுவாக ரசிக்கும் என் நண்பர்களின்றி இந்தத் தொகுப்பு சாத்தியமாக வாய்ப்பிருக்க முடியாது. அவர்களுக்கு நான் பெரிதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.


August 4, 2009

மேப் போட்றவரு

Posted by : சாத்தான்

சில செய்திக் கட்டுரைகளைப் படித்தால் அவற்றின் சோகத்தை மீறி சிரிப்பு வருகிறது. கல்பாக்கம் கடற்கரையில் ஒரு ருஷ்யப் பொறியியலாளரும் அவரது மகளும் தாக்கப்பட்டது பற்றி ஐ.பி.என்.-லைவில் ஒரு IANS கட்டுரை வந்திருக்கிறது.

பொறியியலாளர் தாக்கப்பட்டதையும் அவரது மகள் மானபங்கப்படுத்தப்பட்டதையும் சொல்லிவிட்டு, காவல் துறை விசாரணை செய்துவருகிறது என்பதோடு முடித்துக்கொள்ளாமல் இப்படி நாலு பாரா:

According to officials of the power project, there are over 100 Russian engineers working at the Kudankulam nuclear power project.

The Nuclear Power Corporation of India Ltd (NPCIL) is working on the 2×1000 MW project with Russian technical assistance.

The first unit is expected to be commissioned early next year.

As per the deal between India and Russia, two more reactors of similar or even slightly higher capacity will come up at Kudankulam.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிக்கிறார்கள். அந்த நாலு பாராவைத் தனி செய்தியாகப் போடுவதற்கு மேட்டர் போதாதோ என்னவோ. போதாமைக்கு சைடில் தமிழ்நாடு வரைபடம் வேறு. புனே, சட்டீஸ்கர் கட்டுரைக்கெல்லாம் மேப்பைப் போடக் காணோம்.


July 23, 2009

எழுத்துக் கலைஞர்

Posted by : சாத்தான்

ஆலன் மூர், நீல் கெய்மன் போன்ற காமிக்ஸ் ஓவியர்களுடன் இணைந்து பணியாற்றிய பெரிய எழுத்துக் கலைஞரான* Todd Klein தனது வலைப்பதிவில் எழுத்துக் கலையின் நுட்பங்களைப் படங்களுடன் எழுதுகிறார். பல நல்ல நாவல்களையும் காமிக்ஸ் புத்தகங்களையும் சுருக்கமாக, அழகாக அறிமுகப்படுத்துகிறார்.

அவரது வலைப்பதிவு இங்கே. டாடின் வலையகத்தில் கூடப் பார்க்கவும் படிக்கவும் நிறைய இருக்கிறது. அவர் நல்ல ஓவியர் கூட.

*lettering artist – பலூன்களுக்குள் உரையாடல்களை எழுதுபவர், அட்டை, விளம்பரங்கள் போன்றவற்றுக்கு லோகோக்களை வடிவமைப்பவர்…


குட்டிப் பதிவு

சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)